இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சபுதந்திரி, இதற்காக முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படும் என்றார்.
இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த சபுதந்திரி, குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளின் ஒரு நாள் சேவைக்காக பொதுமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இதற்காக பொதுமக்களின் முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகளை சேகரிக்க உள்ளதாக சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.