ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
இன்று ஜூன் 3 உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிறது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்நாள் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் காரணமாகிறார்.
அவர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். 56 நாடுகள் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தன. ஆகையால் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அங்கீகரித்தது.
மனித இனத்திற்கு சொந்தமானதும் சமூகத்திற்கு பெரும் சேவையாற்றும் ஒரு சாதனமாக மிதிவண்டிகள் இன்றுவரை பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நாள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
மிதிவண்டியாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கி அவர்களுக்கான தனிப்பாதை சமிக்கைவிளக்குகள், சலுகைகளை அளித்து வரும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் வாகன போக்குவரத்தை வேகுவாக குறைப்பதற்கான செயல்பாடுகளில் வாகன தரிப்பிடத்திற்கு அதிகூடிய விலையை நிர்ணயத்திருப்பதும் சில சாலைகளில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. இதனால் நகரம் முழுவதும் நடந்தோ, மிதிவண்டி, அல்லது பொதுப்போக்குவரத்துக்கள் என்பனவற்றையே பயன்படுத்த இயலும். வாகனங்களை விட மிதிவண்டியாளர்களுக்கே அங்கு முன்னுரிமை அளிக்கவேண்டியதும் உண்டு.
மிதிவண்டி வகைகளில் மின்னனு வசதி கொண்ட ஈ-சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் வருகின்றபோதும் இரு காலால் உலக்கி செல்லும் மிதிவண்டிகளின் மவுசு இன்னும் மங்காமல் இருப்பதும் உண்மை.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவரும் உதவலாம். நாம் பயணிக்கும் விதம், பயன்படுத்தும் மின்சாரம், உண்ணும் உணவு மற்றும் வாங்கும் பொருட்கள் வரை, நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலகின் சாலைகள் வாகனங்களால் அடைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை டீசல் அல்லது பெட்ரோலை எரிக்கின்றன. வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக நடப்பது அல்லது மிதிவண்டி ஓட்டுவது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.
Source : Wikipedia