free website hit counter

Ula

Top Stories

இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அத்தபத்துவின் மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை தொடர்ந்து அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ருவாங் மலையில் ஏற்பட்ட வெடிப்பினால் ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்ததையடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் 11,000 க்கும் மேற்பட்ட மக்களை அந்த பகுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான அனுமதி விண்ணப்பம் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு நிற்கும் சிக்கல்கள் இப்போதைக்கு தீராது என்று தெரிகின்றது. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் யாப்புக்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டி திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் இரு வேறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இதில், பிரதான வழக்காக இப்போது, நோக்கப்படும் திருகோணமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அடுத்த தவணைக்காக இந்த மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது, நீதிமன்றத்தில் ஏற்கனவே, கட்சியின் தெரிவுகள் யாப்புக்கு முரணாக நடைபெற்றிருக்கின்றன என்று ஏற்றுக்கொண்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புதிதாக தெரிவான தலைவராக அறிவிக்கப்பட்ட சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர், தங்களின் மீள் சமர்ப்பணங்களைச் செய்வதற்காக தவணை கோரியதனால், 24ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 

குறித்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, தன்னுடைய சமர்ப்பணங்களை வாய்மொழி மற்றும் எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார். அதில், கட்சியின் தெரிவுகள் யாப்புக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்று கூறியதோடு, தலைவர் தெரிவின் போது, இறுதி நேரத்தில் கட்சியின் தலைவரான மாவை, 20 பேரை வாக்களிக்க வைத்தமை மாத்திரமே முரணானது என்றிருக்கிறார்.அத்தோடு, தலைவர் தெரிவின் போது நாற்பதுக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் சிறீதரன், தன்னை வெற்றி கொண்டிருக்கிறார் என்று கூறும் சுமந்திரன்,  முரணாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டவர்களின் வாக்குகளான 20ஐ தனக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள்  என்று கருதி, அவற்றை கழித்தாலும் சிறீதரன், 20க்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற வாதத்தின் பின்னால் நின்று வழக்கினை எதிர்கொள்ள நினைக்கிறார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தெரிவும், அதன் பிறகு இடம்பெற்ற மத்திய செயற்குழுவுக்கான தெரிவும் பொதுக்குழு உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. யாப்புக்கு முரணாக சில தவறுகளை தலைவர் மாவை இழைத்திருக்கின்றார். அதுவும், தலைவர் தெரிவின் போது, மேலதிகமாக வாக்களிக்கப்பட்ட 20 பேர் தொடர்பிலானது என்ற நிலைப்பாட்டில் நின்று விடயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சுமந்திரன் நம்புகிறார். அது, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களைக் கடக்க உதவும் என்றும் அவர் நினைக்கலாம். தலைவர் தெரிவில் தான் தோற்றாலும் கட்சியின் ஓட்டத்தில் தன்னுடைய வகிபாகம் தொடர்பில் சுமந்திரனுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கின்றது என்பதைத்தான் கடந்த இரண்டு மாத காலம் உணர்த்தியிருக்கின்றது. 

கட்சியின் தலைவர் தெரிவு என்பது, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்றே ஆக வேண்டும். அதன்மூலம், ஏதேச்சதிகாரமற்ற கட்சிக் கட்டமைப்பை உருவாக்கிக் பேண முடியும் என்ற நிலைப்பாட்டை சுமந்திரன் இப்போது கண்டடைந்திருக்கிறார். அது, கடந்த காலத்தில் சுமந்திரனும் அங்கம் வகித்த 'பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் முடிவெடுக்கும் தலைமை' என்ற அதிகார கட்டமைப்பு இழைத்த தவறுகளில் தன்னுடைய பங்கு இருந்தமை தொடர்பிலான குற்றவுணர்ச்சியின் வெளிப்பாட்டினால் எழுந்ததாக இருக்கலாம். அல்லது, கட்சியின் பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதில் இருந்து நகராமல், கட்சியை சீரழித்தமை தொடர்பில் கிடைத்த அண்மைய ஞானமோ தெரியாது. ஞானம் கிடைத்தமை தொடர்பில் அவர் கடந்த காலத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள்தான், அவரை சம்பந்தன் மற்றும் மாவைக்கு நெருக்கமான கட்டத்தில் இருந்து வெளித் தள்ளுவதற்கும் காரணமானது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவினால் அல்லாடும் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அடுத்தவரிடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் பொது வெளியில் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, சம்பந்தன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார். ஏனெனில், சுமந்திரனை தன்னுடைய தளபதியாகவே சம்பந்தன் வளர்த்தார். அவருக்கு அரசியல் அனுபவம் ஏற்படுவதற்கு முன்னரேயே, அதிக பொறுப்புக்களைக் கொடுத்து, கட்சிக்குள்ளும் தமிழ் அரசியலுக்குள்ளும் முக்கிய நபராக மாற்றினார். இன்று சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தவிர்க்க முடியாத நிலைக்கு உயர்ந்துவிட்டார். அதற்கு, அவரின் உழைப்பும் தற்துணிவும்கூட காரணம். அதுதான், அவரை வெகு சீக்கிரத்திலேயே வளர்த்துவிட்டது. அதுபோலவே, அவருக்கு எதிராக கட்சிக்குள் சம்பந்தன், மாவை தொடங்கி பலரும் திரும்புவதற்கும் சுமந்திரனின் தற்துணிவே காரணம்.

தமிழரசுக் கட்சியின் யாப்பினை முன்வைத்து கட்சியின் செயற்பாடுகளை நீதிமன்ற வழக்குகளினூடாக எதிர்கொண்டால், அது இப்போதைக்கு தீராது. ஏனெனில், கட்சியின் யாப்புக்கு முரணாக கட்சியின் தலைமையும் நிர்வாகமும் தொடர்ச்சியான மீறல்களைச் செய்து வந்திருக்கின்றது. ஒரு கட்சியாக காலத்திற்கு தேவையான யாப்பு மாற்றங்களை தமிழரசுக் கட்சி செய்திருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு மாற்றங்களைச் செய்திருக்கவில்லை. அப்படி செய்ய முயன்றாலும், அதற்கான பொதுக்குழு அங்கீகாரங்கள் முறையாக பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக, தலைவர் தெரிவில் கொழும்புக்கிளை என்று கூறி பலரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கட்சியின் யாப்பின் பிரகாரம், வடக்கு கிழக்கில் இருக்கும் தொகுதிக்கிளையைச் சேர்ந்தவர்களும், மத்திய குழுவினையும் சேர்ந்தவர்களும் உள்ளடங்கிய பொதுக்குழு உறுப்பினர்களே வாக்களிக்க முடியும் என்று வரையறுக்கின்றது. அப்படியான நிலையில், எப்படி யாப்பிற்குள் உள்வாங்கப்படாத கொழும்புக்கிளையைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாது. அதனை முன்னிறுத்தி நீதிமன்றங்களை நாடினால் விளைவு என்னவாகும்? இப்படி பல சிக்கல்களோடு தமிழரசுக்கட்சி இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக நீண்ட காலம் உறங்கு நிலையில் இருந்த தமிழரசுக் கட்சியை 2004 பொதுத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்பித்து, சம்பந்தன் -மாவை உள்ளிட்டவர்களிடம் கையளித்தனர். முள்ளிவாய்க்கால் முடிவுகளோடு விடுதலைப் புலிகளின் ஆளுகை அகற்றப்பட்டதும், தமிழரசுக் கட்சி தமிழர் அரசியலின் முதன்மைக்கட்சியாக மீண்டும் மாறியது. அதன்மூலம், சம்பந்தன் மூத்த தலைவரானார். அவர் கிட்டத்தட்ட ஏதேச்சதிகாரம் பெற்றவரானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் அவர், பங்களிக் கட்சிகளின் கேள்விகளுக்குப் அப்பாலான ஆளுமையாக மாறியிருந்தார். அந்த நிலை காலத்துக்கும் தொடரும் என்று சம்பந்தன் நினைத்ததன் விளைவுதான், தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யாமல் விடுவதற்கு காரணமானது. தன்னுடைய காலத்துக்குப் பின்னராக கட்சியின் எதிர்காலம் எப்படிப்பட்டது, அதற்காக என்னென்ன மறுசீரமைப்பைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அவர் சிந்திக்கவில்லை. மாறாக, தனக்குப் பின்னர் தான் சொல்வதையெல்லாம் செய்யக்கூடிய ஒருவரைத் தலைவராக முன்னிறுத்திவிட வேண்டும் என்று மாவையை தலைவராக்கினார். அது, கட்சியை இன்னும் இன்னும் மோசமாக சிதைத்து விட்டது. அதுபோல, கட்சியின் யாப்பு என்னென்ன விடயங்களை வரையறுக்கின்றது என்பது தொடர்பில் மாவை தொடங்கி கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் தெளிவில்லை. அதனால்தான், தாங்கள் நினைத்த காரியங்களையெல்லாம் செய்ய முயன்றதன் விளைவாக, கட்சி இன்று உடனடியாக தீர்க்கமுடியாத சிக்கல்களை சந்தித்து நிற்கின்றது. 

தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களில் ஒரு பகுதியினர், கட்சியை பதவிகளை அடைவதற்கான வழியாக மட்டுமே காண்கிறார்கள். அதுபோல, தமிழரசுக் கட்சியை மொய்த்துக் கொண்டிருக்கும் வெளித்தரப்பினரில் கணிசமானவர்கள், எதிர்காலப் பதவிகளைக் குறிவைத்துத்தான் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். ஊடக முதலாளிகள் தொடக்கம் பெரும் வியாபாரிகள் வரையில் தங்களின் அதிகாரத்துக்கான ஆசையை அடைவதற்கான வழியாக தமிழரசுக் கட்சியை காண்கிறார்கள். அது, பல முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு காரணமாகின்றது. தமிழரசுக் கட்சியின் அதிகாரமிக்க பதவிகளைப் பிடித்துக் கொண்டிருக்க பலரும் முயல்வது, அதனை ஒரு பணம் கொழிக்கும் இடமாக பார்ப்பதனால் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. கடந்த பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் தமிழரசுக் கட்சியை வெளித்தரப்புக்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள் சீரழித்ததான குற்றச்சாட்டும் உண்டு. இப்படியான குற்றச்சாட்டுக்களை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரியளவில் எதிர்க்கவும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டுக்கள், கட்சியின் மீதான அபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் நிலையில், அவற்றை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான நடவடிக்கைகள் எதனையும் கட்சி செய்யவில்லை.  மாறாக, புதிய தலைவர் தெரிவின் போதும் வெளித்தரப்புக்கள் தங்களின் அதீத தலையீடுகளை செய்தன என்ற குற்றச்சாட்டுக்களையும் சேர்த்தே எழ வைக்கும் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

தமிழரசுக் கட்சி அடிப்படையில் இருந்து மறுசீரமைப்புப் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. அதில், முதலாவது கட்சியின் யாப்பு காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அத்தோடு, கட்சியின் தோற்றத்திற்கான இலக்கின் அடிப்படைகள் பேணப்பட வேண்டும். அதுதான், தமிழரசுக் கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு உதவும். "தமிழரசுக் கட்சியை பல ஆண்டுகளுக்கு நீதிமன்றப் படிகளில் ஏற்றி இறக்குவதற்கான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. கட்சியின் யாப்புத் தொடங்கி, நிர்வாக நடவடிக்கைகள் என்று நாளும் பொழுதும் முரணான நடவடிக்கைகளினால்தான் இன்று தமிழரசுக் கட்சி முட்டுச் சந்தை அடைந்திருக்கின்றது. இவற்றுக்கு எதிராக ஒவ்வொரு விடயமாக எடுத்து நீதிமன்றத்தை நாடினால் விடயம் இன்னும் மோசமாகும்." என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரோடு பேசும் போது கூறினார்.

தமிழ்த் தேசிய அரசியலும், தமிழரசுக் கட்சியும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப் பெறுவதற்காக தோன்றியவை. ஆனால், தமிழ் மக்களுக்கான அறத்தினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாரும் உணரவில்லை. மாறாக, பதவிக்கும் அதிகாரத்துக்குமான போட்டிக்களமாகவும், கருவியாகவுமே தமிழரசுக் கட்சியைக் காண்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள், தமிழரசுக் கட்சியில் மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலிலும் நம்பிக்கையிழப்பார்கள். அப்போது, அரச ஒத்தோடிக் கட்சிகளும், தமிழர் விரோத சக்திகளும் தமிழ் மக்களை இலகுவாக ஆக்கிரமிப்பார்கள். அந்த ஆபத்தை தமிழரசுக் கட்சியினர் இன்னமும் உணர்கிறார்கள் இல்லை. இன்று சந்திக்கும் சிக்கல்களை எப்படி கடப்பது என்பது தொடர்பில், கட்சிக்குள்ளேயே ஒருங்கிணைவு இல்லை. மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக விடயங்களை கையாளும் நிலையும், விடய ஞானமற்றவர்களின் தலையீடுகளும் மாத்திரமே அதிகரித்திருக்கின்றது. இது, தமிழரசுக் கட்சியை கால காலத்துக்கும் முட்டுச் சந்துக்குள் முடக்கவே  செய்யும்.

 

 

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிற்கு அடிப்படை காரணி, இனவாதம் அல்லது பேரின வாதம் என்கிறோம். ஆனால் அதை Racisme எனும் ஆங்கில சொல்லுடன் இணைத்து கதைப்பது மிக அரிது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவை யாப்பு வரையறைகளுக்கு அமைவாக நடத்துவதற்கு இணங்குவதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

யாப்பு மீறல்களோடு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவை இரத்து செய்யவும், தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரியும் திருகோணமலை நீதிமன்றத்தில், தமிழரசுக் கட்சி உறுப்பினரான சந்திரசேகரம் பரா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளே, நீதிமன்றத்தில் கட்சித் தெரிவுகள் யாப்பினை மீறி இடம்பெற்றிருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, யாப்பு ஒழுங்குக்கு அமைவாக மீண்டும் தெரிவுகளை நடத்துவதற்கும் இணங்கியிருக்கிறார்கள். இதனை அடுத்து வழக்கு, இன்னொரு பிரதிவாதியான எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களை அறிந்து, வழக்கின் போக்கினை தீர்மானிப்பதற்காக ஏப்ரல் 05ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. 

அதுபோல, தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுதல் மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கும், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் போக்கினை அறிந்து முடிவெடுப்பதற்காக ஏப்ரல் இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்கள், கட்சிக்கு துரோகம் இழைக்கிறார்கள் என்று கட்சியின் புதிய தலைவராக தெரிவாகி, இப்போது தெரிவு பிழையென ஏற்றுக் கொண்டிருக்கும் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்  குற்றஞ்சாட்டியிருந்தார்கள். அத்தோடு, எந்தவொரு தருணத்திலும் வழக்குத் தொடர்ந்தவர்களுடன் எந்த இணக்கப்பாடுகளுக்கும் செல்லமாட்டோம். நீதிமன்றத்தில் வழக்கினை உடைத்து வெற்றிபெறுவோம் என்றும் வாய்சவடால்களை அடித்திருந்தார்கள். ஆனால், அவையெல்லாம் ஊடக உளறல்களாக மட்டுமே முடிந்திருக்கின்றன. ஆனால், யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து இப்போது நீதிமன்றத்தின் முன்னால் சரணடைந்திருக்கிறார்கள். இந்தச் சரணடைவு, என்பது ஒப்பீட்டளவில் காலம் கடந்ததுதான். ஆனாலும் இதனை ஏற்பதைத் தவிர தமிழரசுக் கட்சிக்கு முன்னால் எந்தத் தெரிவுகளும் இல்லை என்பதே உண்மை. 

தற்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரைத் தவிர முக்கியஸ்தர்களாக இருக்கும் அனைவரும் ஆயுதப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னராகவும் அரசியலுக்குள் வந்தவர்கள். இவர்களிடத்தில் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தீர்மானங்களின் குணங்குறிகள் அதிகமாகவே ஆளுமை செலுத்துகின்றது. அதாவது, தாங்கள் எடுப்பதுதான் முடிவு, அதனை ஏற்றுக்கொண்டால் இருங்கள்; இல்லையென்றால் விலகிவிடுங்கள் அல்லது விலக்கப்படுவீர்கள் என்பதுதான் அது. ஆனால், தற்போதுள்ள ஜனநாயக அரசியல் களத்தில் இந்த ஆயுத இயக்க வழிமுறை பெரிதாக உதவாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழரசுக் கட்சித் தலைவராகவும் சம்பந்தன், கடந்த பொதுத் தேர்தல் வரையில் ஆயுத இயக்கத் தலைவர் ஒருவர் கொண்டிருக்கும் அதிகாரத்தை ஒத்த அதிகாரங்களோடுதான் வலம் வந்தார். கடந்த தேர்தலுக்குப் பின்னர், அவரின் பிடி வெகுவாக தளர்ந்தது. அதற்கு அவரது வயது மூப்பும் உடல் தளர்வும் பெரிய காரணங்களாகின. மாவை எப்போதுமே முடிவுகளை எடுக்கும் தலைவராக இருந்ததில்லை என்பதால், அவர் பெரிய தலைமைத்துவ தாக்கங்களைச் செலுத்தவில்லை. மாறாக, கட்சியை குழப்பங்களுக்குள் தள்ளும் வேலைகளையே ஆரம்பத்தில் இருந்து செய்து வந்திருக்கிறார்.

ஆயுத போராட்ட இயக்கங்களின் ஆளுமையோடு அல்லது அதனை ஒட்டிய ஒழுங்கோடு அரசியலுக்குள் வந்தவர்கள், தங்களையும் அப்படியாக நினைக்க தலைப்பட்டதன் விளைவுதான், நீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சியை சரணடைய வைப்பதற்கும் காரணமாகியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, கட்சியின் வட்டாரக்கிளை தொடங்கி தொகுகிக்கிளை, மாவட்டக்கிளை தெரிவுகள் வரையில் கட்சியின் யாப்பு முறைமை பின்பற்றப்படவில்லை என்று பல தடவைகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதுபோல, பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 166ஐ தாண்ட முடியாது என்பதுவும்  சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அதனை கட்சித் தலைவர் மாவையோ, தலைவர் தெரிவுக்கு போட்டியிட்ட சிறீதரனோ, சுமந்திரனோ, சீ.யோகேஸ்வரனோ கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, எப்படியாவது தலைவர் தெரிவை நடத்தி கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணப்பாடே அவர்களிடம் இருந்தது. கட்சித் தலைவர் ஆகிவிட்டால், கட்சி ஒட்டுமொத்தமாக தன்னுடைய கட்டுக்குள் வந்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை ஆயுத இயக்க ஒழுங்கின் போக்கில் வருவது. ஆனால், தமிழரசுக் கட்சியோ யாரும் சர்வாதிகார ஆளுமை செலுத்தும் வகையான ஏற்பாடுகளை யாப்பில் கொண்டிருக்கவில்லை. ஜனநாயக கட்டங்களை வலுப்படுத்தும் வரையறைக் கொண்டது. அதனை யாரும் தலைக்குள் எடுக்காததன் விளைவாக, தலைவர் தெரிவில் போட்டியிட்டவர்களும், அவர்களுக்காக இயங்கியவர்களும் தாங்கள் நினைத்ததையெல்லாம் (கட்சிக்குள்) செய்துவிடலாம் என்று நம்பினார்கள். 

சிறீதரன் தலைவராக தெரிவானதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரனையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சிக்குள் இருந்து அகற்ற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்களே கூட்டங்களைக் கூட்டிப் பேசினார்கள். குறிப்பாக, சிறீதரனை வரவேற்று மன்னாரில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட சிறீதரன் ஆதரவாளர்கள் சுமந்திரனை கடுமையாக விமர்சித்தார்கள். அத்தோடு, அவர்களை அகற்ற வேண்டும் என்ற தொனியிலும் பேசினார்கள். ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் அதற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்ததும், அதனைக் கைவிட்டு அமைதியானார்கள். அதே அரியநேத்திரன் தான், கட்சியின் யாப்பை மீறிய செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதும், சர்வதேச விசாரணை கோரும் தமிழரசுக் கட்சியை உள்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தியிருக்கிறார்கள் என்று கட்டுரை எழுதியிருக்கிறார். அத்தோடு, தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக யாப்பு மீறல்களை செய்திருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார். அப்படியான நிலையில், தற்போது யாப்பு மீறல்களுக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களை அவர் துரோகிகள் எனும் தோரணையில் விளிக்கிறார். மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரே, எந்தவித அடிப்படைத் தெளிவும் அற்று, பதவிகளை மாத்திரம் இலக்கு வைத்து ஆடப்படும் ஆட்டத்தில் அம்பாக நின்று முறிகிறார். புதிய மத்திய செயற்குழு தெரிவு, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் குழப்பங்கள் விளைவிக்கப்படாமல் இருந்திருந்தால், சிலவேளை கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று, அந்தத் தீர்மானங்கள் தேர்தல் திணைக்களத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இன்று நீதிமன்றங்களின் முன்னால் சரணடைய வேண்டியும் ஏற்பட்டிருக்காது. 

தங்களின் தீர்மானங்களை ஆதரிக்காதவர்களை விரட்டும் மனநிலையைக் கடந்து நின்று இயங்க வேண்டிய தேவை ஜனநாயக விழுமியங்களைப் பேணும் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு வேண்டும். அதற்குத் தயாராக இல்லாதவர்கள் தனித்தனிக் கட்சிகளை தாங்களே ஆரம்பித்து நடத்த வேண்டும். அவை, குடும்பக் கட்சிகளாக நீடிக்கலாம். தமிழரசுக் கட்சிக்குள் வரும் யாராக இருந்தாலும் அந்தக் கட்சியின் அடிப்படை யாப்பினையும் ஒழுங்கினையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான், கட்சியை நீதிமன்றங்களுக்குள் கொண்டு சென்று முடக்குவீர்கள். தற்போதுதான், தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு கட்சியின் யாப்பு என்ன சொல்கின்றது, அதனை மீறினால் என்ன சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, நீதிமன்றத்திடம் யாப்பு ஒழுங்குக்கு அமைவாக இயங்க ஒப்புக் கொண்டாகிவிட்டது. ஆனால், இனித்தான், அடுத்த அடுத்த கட்டங்களில் சிக்கல்கள் தடைக் கற்களாக வரப்போகின்றன. ஏனெனில், வட்டாரக் கிளை தொடங்கி மாவட்டக் கிளை வரையில் தனக்குச் சார்பானோருக்கே பதவிகளை வழங்கும் போக்கு மாவை உள்ளிட்ட முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட விரோதங்களினால் பலரும் அதிகார வரம்புக்கு அப்பால் சென்று விலக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், அவர்கள் யாரும் நீதிமன்றத்தை நாடினால், தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பல ஆண்டுகள் இழுபடும். அத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சித் தெரிவுகள் எவையும் நடைபெற்றிருக்காத நிலையில், கட்சியை சவாலுக்கு உட்படுத்தி தென் இலங்கை இனவாதிகள் யாராவது நீதிமன்றத்தை நாடினால், தமிழரசுக் கட்சி என்கிற தமிழ் மக்களின் முதன்மைக் கட்சி ஒட்டுமொத்தமாக முடங்கும் அச்சுறுத்தலும் முன்நின்று ஆடுகின்றது. 

ஏற்கனவே, தமிழரசுக் கட்சி பிரிவினையை ஊக்குவிக்கின்றது என்று சுட்டிக்காட்டி கட்சியைத் தடை செய்யக் கோரி வழக்கொன்று தென் இலங்கை இனவாதிகளினால் தொடுக்கப்பட்டு, மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கின்றது. சமஷ்டி என்பது பிரிவினைக் கோரிக்கையல்ல என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், கட்சி தப்பித்தது. எப்போதுமே தென் இலங்கை நீதிக்கட்டமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும் என்று கொள்ள முடியாது. அது, அதிக தருணங்களின் அதிகார - இனவாதத் தரப்புக்களின் இழுப்புக்கு இழுபடும் ஒன்றாகவே இருந்திருக்கின்றது. அப்படியான நிலையில், அரசியல் விடுதலைப் போராட்டத்தினை பெரும் அடக்குமுறைகளுக்குள்ளும் சட்ட கட்டுப்பாடுகளுக்குள்ளும் நின்று முன்னெடுக்கும் தமிழ்த் தரப்பு தன்னுடைய நிலையைப் பாதுகாப்பதில் அதிக அக்கறையோடு இருக்க வேண்டும். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் இலக்கைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கட்சியை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, இருக்கும் வரையில் பதவி பகட்டை அனுபவித்துவிட்டு செல்லோம் என்பதற்காக தகிடுதித்தங்களையும் முறையற்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இன்றைக்கு தமிழரசுக் கட்சி எதிர்கொண்டு நிற்கும் முடக்க நிலை, கட்சியின் பெருந்தலைவர், தலைவர் தொடங்கி முக்கியஸ்தர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள். ஏனெனில், அவர்களுக்கு கட்சியைப் பற்றிய அக்கறையைக் காட்டிலும் தங்களின் பதவிகள், அவற்றின் மூலம் எவ்வாறான தனிப்பட்ட ஆதாயங்களை அடையலாம் என்பதெல்லாம் முதன்மைக் காரணிகளாக இருந்திருக்கின்றன. அதனால்தான், வெளிச் சக்திகளும், பணமுதலைகளும் கட்சியை கைப்பற்ற முயல்கின்றன. 

"...நான் கட்சிக்காக பல இலட்சம் ரூபாய்களைச் செலவளித்திருக்கிறேன். அதற்கான பிரதிபலனைக் கட்சி செய்ய வேண்டும். அதனால்தான், மத்திய செயற்குழு தெரிவு பொதுக்குழு வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும் குழப்பம் விளைவித்தோம். நாங்கள் தொடர்ந்து செலவளிக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்தப் பதவியும் தரமாட்டார்கள் என்றால் எப்படி..." என்று மாவையினால் பொதுக்குழு உறுப்பினராக முறையற்ற ரீதியில் உள்வாங்கப்பட்ட நபர் ஒருவர், அண்மையில் பலர் முன்னிலையில் கூறியிருக்கின்றார்.

இதுமாதிரியாகவே, கட்சித் தலைவர் தெரிவின் போதும், வேட்பாளராக போட்டியிட்டவர்களில் ஒரு சிலர் மற்றவர்களின் ஆதவரைக் கோருவதற்காக பதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியளிப்புத்தான், மத்திய செயற்குழு தெரிவுகள் பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும் குழப்பங்கள் ஏற்படக் காரணமாகின. கட்சியை தனிப்பட்ட சொத்தாக கருதியதன் விளைவாகவே இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை, கட்சியின் அடிப்படை ஜனநாயக மரபுக்கே எதிரானது. இனியாவது, தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாலான ஒழுங்கின் நின்று இயங்குவதற்கு தமிழரசுக் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றங்களில் ஒவ்வொரு நாளும் அல்லாட வேண்டி வரும். அது, அந்தக் கட்சியினருக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஏனெனில், தமிழ்த் தேசியப் பரப்பில் வடக்குக் கிழக்கு பூராவும் பரந்துபட்டு ஆளுமை செலுத்தும் வேறு எந்தக் கட்சியும் தமிழ் மக்களிடம் இல்லை.

அரசியல்வாதிகளின் பரவணிக்குணம் என்பது எப்போதுமே தங்களின் தவறுகளையும் குற்றங்களையும் மறைத்து மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது மட்டுமே. அதுதான் அரசியலில் வெற்றி தேடித்தரும் என்று நம்புகிறார்கள். இப்போது நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு நிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும்கூட அரசியல்வாதிகளுக்கே உரிய பரவணிக்குணத்தை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மாறாக, விடயங்களை சுமூகமாக கையாள்வது தொடர்பிலான எந்தவித சிந்தனையையும் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. 

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான அறிவிப்பு வெளியான தருணம் முதல், அந்தக் கட்சி தனக்குள்ளேயே சேறுபூசுதல்களையும் பொய்புரட்டையும் செய்யத் தொடங்கி விட்டது. அது, கட்சியின் தமிழ்த் தேசிய அடையாளத்தை மிக மோசமாக சிதைத்திருக்கின்றது. அத்தோடு, சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒழுங்கோடும் ஒற்றுமையோடும் ஜனநாயக மனப்பான்மையோடும் இயங்கத் தெரியாதவர்கள் எப்படி, தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக நின்று வழிநடத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்திருக்கின்றார்கள். இந்தக் கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் எந்தத் தலைவரிடத்திலாவது பதிலை எதிர்பார்த்தால், அந்தப் பதில் மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக மட்டுமே இருக்கும். ஒருபோதும், தவறுகளில் அல்லது கட்சியின் சீரழிவில் தங்களின் பங்கு குறித்து பேசத் தலைப்பட மாட்டார்கள். 

அதற்கான அண்மைய உதாரணம், கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நடத்திய சந்திப்பிலும் அரங்கேறியது. முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்தியர் சிவமோகன், மட்டக்களைப்பைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபைத் தலைவர் சரவணபவன் ஆகியோர், தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, மத்திய செயற்குழுத் தெரிவு, பொதுக்குழு அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால், கட்சி இன்று நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்திருக்காது என்று கூறினார்கள். அப்போது, குறித்த சந்திப்பிற்கு தலைமை வகித்த மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர், ஏற்கனவே நடந்த விடயங்களைப் பற்றி பேசுவதற்காக, இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறி, மடை மாற்றியிருக்கிறார்கள். 

தமிழரசுக் கட்சியின் தலைவராக நீண்ட பத்து ஆண்டுகளாக செயற்பட்ட மாவை, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் கட்சியின் யாப்பு ஒழுங்குக்கு மாறாக தொடர் குற்றங்களைப் புரிந்திருக்கிறார் என்பது தொடரும் குற்றச்சாட்டு. அதுபோல, தலைவருக்கான தெரிவின் போது, வாக்களித்தவர்களில் பலரின் நியமனம் யாப்பை மீறியது என்று அந்தத் தேர்தல் வாக்களிப்பின் போதே சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தல் சமயத்திலேயே கட்சி யாப்பினை மீறும் செயலை மாவை புரியும் போது, வேட்பாளர்களான சிறீதரனும், எம்.ஏ.சுமந்திரனும், சீ.யோகேஸ்வரனும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக அங்கீகரித்து செயற்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை என்பது, யாருமே கட்சியின் யாப்புக்கோ ஒழுங்கு முறைக்கோ மதிப்புக் கொடுத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. இவ்வாறான தவறு நிகழும் போதே, அது நீதிமன்றங்களில் கட்சியை முன்னிறுத்தும் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

கிடைக்கும் வரை ஆதாயம் பார்க்கும் மனநிலையில் நின்றுதான், மாவை தொடங்கி தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறாத போது, மற்றவர்களின் குற்றம் குறைகளை கூறிக்கொண்டு தங்கள் மீது உத்தம  வேடம் தரித்து உலாவ முயல்கிறார்கள். கட்சியின் யாப்பு ஒழுங்குக்கு அமைவாக அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இன்று நீதிமன்றங்களை நாடியிருக்கின்றவர்கள் மீது கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று கூறும் தரப்பினரால், ஒருபோதுமே  கட்சி நடவடிக்கைகள் யாப்புக்கு அமைவாக நடைபெற்றன என்று வாதிட முடியாது. தங்களுக்கு கிடைக்கவிருந்த பதவி பகட்டுக்களை நீதிமன்ற வழக்குகள் தடுத்துவிட்டன என்பதுதான் அவர்களின் ஒரே கோபம். அந்தக் கோபத்தினை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வாய்ச் சவடால்களையும் சேறுபூசுதல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தெரிவின் போது, பிரதேசவாதம், சாதியவாதம், மதவாதம், தென் இலங்கைத் தலையீடுகள், புலம்பெயர் பணமுதலைகளில் தலையீடுகள் என்று பல விடயங்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அதனை முழுவதுமாக திறந்து பேசுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாரும் தயாராக இல்லை. அப்படிப் பேசுவதற்கு தயாராக இருந்தால், பல பசுந்தோல் போர்த்திய நரிகள் வெளிப்படுவார்கள். கட்சித் தலைவர் தேர்வில் போட்டியிட்டவர்களிலேயே மற்றவரை நோக்கி தமிழ்த் தேசியத் துரோகி என்று அடையாளப்படுத்தியவரில் இருந்து, மதவாதம் பேசி வாக்குச் சேகரித்தவர், பிரதேச வாதம் பேசி வன்மம் கக்கியவர்கள் வரையில் உண்டு. தமிழ்த் தேசிய அடையாளத்துக்குள் இருந்து கொண்டு பிரதேசவாதமும், சாதியவாதமும், மதவாதமும் பேசிக் கொண்டு, தமிழரசுக் கட்சியை வழிநடத்துவதற்காக தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தமை எல்லாம் என்ன வகையிலான அறத்தின் வழி வருவது என்று தெரியவில்லை. 

தமிழ்த் தேசியம் ஒன்றும் அற்பத்தனங்களில் கட்டியெழுப்பப்படவில்லை. மாறாக, பெருந்தியாகங்களினாலும் அர்ப்பணிப்புக்களினாலும் எழுந்து நிற்பது. அதனை தமிழ்த் தேசிய செல்நெறிக்குள் இயங்கத் தயாராக இருப்பவர்கள் முதலில் புரிந்து நடக்க வேண்டும். தமிழரசுக் கட்சி தன்னை தமிழ் மக்களுக்கான கட்சியாக கருதாமல் வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்காக இயங்க ஆரம்பித்தால், அது தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து நிற்கும். அது, தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பெருமளவு குலைக்கும். 

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், கிளிநொச்சியில் நடத்திய சந்திப்பில் வழக்குகளை நிபந்தனையின்றி மீளப்பெறுமாறு வழக்கு தொடுநர்களிடம் கேட்பதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் யாப்பினை  மீறி தலைவர் தேர்வு நடைபெற்றிருக்கின்றது. அதில், நிறையவே முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறியே தொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வழக்கைத் தொடுத்தவருக்கு வழக்கை மீளப்பெறுமாறு, திருகோணமலையின் பிரதான ஆலய பிரதம குழு, சமயப் பெரியவர்கள், புலமையாளர்கள் குழு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. அந்த அழுத்தங்கள் யார் தலையீட்டோடு நடைபெறுகின்றன என்பதை, கிளிநொச்சி தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் கூட்டம் வெளிப்படுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கு தொடுத்தவரான பீற்றர் இளஞ்செழியன் கிளிநொச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவரிடம் யாரும் நேரடியாக வழக்கினை மீளப்பெறுமாறு கோரவில்லை. வழக்குகளை நிபந்தனையின்றி மீளப்பெறுமாறு கோருதல் என்பது என்ன அடிப்படையிலானது என்று மாவை சேனாதிராஜா, சிறீதரன் தொடங்கி தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிப்படுத்துவது நல்லது. ஏனெனில், அந்த வழக்குகள் கட்சியின் யாப்பினை பின்பற்றி கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவன. சிலவேளை அந்த வழக்குகள் மீளப்பெறப்பட்டாலும், கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் நாளை வழக்குத் தொடுக்க மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், கட்சியின் யாப்புக்கு மீறிய தொடர் நடவடிக்கைகளை கட்சி இழைத்திருக்கின்றது. அப்படியான நிலையில், இன்றைக்கு நிபந்தனையின்றி வழக்கை மீளப்பெறுதல் பற்றியோ, நீதிமன்றத்தில் வழக்குகளை முறியடிப்போம் என்று முழங்குவதினால் எந்தப் பயனும் இல்லை. அது, கட்சியை முடக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும். 

இன்றைக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர்களிடம் இருக்கும் ஒரே தெரிவு, கடந்த கால தவறுகளை கழைவது தொடர்பிலான உறுதி மொழியை நீதிமன்றத்திலும் கட்சிக்காரர்களிடமும் வழங்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. தொகுதிக் கிளை தொடங்கி, கட்சித் தலைவர் தெரிவு வரை கட்சியின் யாப்பின் பிரகாரம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும். அதனை விரைவாக நடத்தியாக வேண்டும். இல்லையென்றால், பொதுத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நிலையில், கட்சியை நீதிமன்றங்களில் முடக்கிவிடும் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. எதிர்வரும் நாட்களில் இன்னும் சில வழக்குகள் கட்சித் தெரிவுகள், கடந்த தவறுகளுக்கு எதிராக தொடுக்கப்படும் என்று தெரிகின்றது. அப்படியான நிலையில், ஏற்கனவே நிகழ்ந்த தவறுகள் குறித்து நீதிமன்றங்களில் ஏற்று, நீதிமன்றங்கள் வழக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விரைவாக கட்சித் தெரிவுகளை தொகுதிக் கிளையில் ஆரம்பித்து நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிரகாரம், சிறீதரன் தன்னுடைய தலைவர் பொறுப்பை ஏற்பதே இப்போது இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி. அதனை விடுத்து, நீதிமன்றங்களில் வழக்கை முறியடிப்போம் என்று அறிக்கை அரசியல் நடத்துவது தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. அதனால், ஆதாயம் அடையப்போகிறவர்கள் தென் இலங்கைக் கட்சிகளின் துணைக்குழுக்களும், உதிரிகளும் மட்டுமே.

நீதிமன்றங்களில் தவறுகளை ஏற்று விரைவாக கட்சியை மறுசீரமைத்து வழிப்படுத்த வேண்டும். மாறாக, மாவையின் செல்நெறியான "...பார்க்கலாம் தம்பி, செய்யலாம் தம்பி..." என்பதற்குள் சென்றால், கட்சி எதிர்கொண்டுள்ள தற்போதைய சிக்கலை ஒருபோதும் தீர்க்க முடியாது. தற்போது, கட்சி சந்தித்துள்ள நெருக்கடியை தங்களின் தனிப்பட்ட ஆதாயம், பகை - பழியுணர்ச்சிகளை தீர்ப்பதற்காவோ, அடைவதற்காகவோ யாரும் முயலக்கூடாது. 

இந்த ஆண்டு நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானம் மிக்க வாக்குகளாக இருக்கும். ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் எழுச்சி பெற்றது மாதிரியாக தனித்த சிங்கள வாக்குகளினால் யாரும் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இல்லை. அப்படியான நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை அரங்கில் இருந்து அகற்றுவதற்கான செயற்திட்டங்களை ரணில் - ராஜபக்ஷக்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அதில், பிரதானமானது ஜனாதிபதித் தேர்தல் புறப்பணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயங்களாகும். தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயங்களுக்கு ஒத்துழைத்து செயற்பட்டிருக்கவில்லை. 2010 ஜனாதிபதித் தேர்தலிலேயே, ராஜபக்ஷக்களுக்கு எதிராக சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தது. அப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே எடுக்கும் என்பது எதிர்பார்ப்பு. அப்படியான நிலையில், அது ஒருபோதும் ரணில்- ராஜபக்ஷக்கள் கூட்டுக்கு ஆதரவான நிலைப்பாடாக இருக்க வாய்ப்பில்லை. அதுபோல, வெற்றிவாய்ப்புள்ள சஜித் பிரேமதாசவைக் கைவிட்டு அநுரகுமாரவின் பக்கத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புக்களும் இல்லை. அப்படியான நிலையில், சஜித்துக்கான தமிழ் வாக்குகளைக் குறைப்பதற்கான திட்டத்தின் போக்கில், தமிழரசுக் கட்சிக்குள் தங்களின் செயற்திட்டங்களுக்கு இணங்கக்கூடியவர்களை ரணில் - ராஜபக்ஷக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன்போக்கில், தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடங்கி அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சி நிரலின் போக்கில் யாராவது நீதிமன்றத்துக்குள் கட்சியை முடக்க முனைந்தால், அது மீள முடியாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியலுக்கு தமிழரசுக் கட்சி தன்னை மீளத் தயார்ப்படுத்த வேண்டும். அதுவும் ஒரு சில மாதங்களுக்குள் அதனைச் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், வரலாற்றுத் தவறிழைத்த கறுப்புப் பக்கத்துடன் அந்தக் கட்சி தன்னுடைய முடிவுரையை விரைவில் எழுதிக் கொள்ள வேண்டி ஏற்படலாம். அதற்கான பொறுப்பை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன், மாவை தொடங்கி சிறீதரன், சுமந்திரன் என்று அனைவரும் ஏற்க வேண்டி வரும். 

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சி எந்தக் குடும்பத்தினதும் முதுசம் அல்ல. அதுபோல, தனி நபர்கள் ஏகநிலையில் ஆளுகை செலுத்துவதற்கு அதுவொன்றும் ஆயுத இயக்கமும் அல்ல.

தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பிக்கும் போதே, ஜனநாயக மரபுகளைப் பேணும் வகையிலான யாப்பையும் சேர்த்தே இயற்றினார். அந்த யாப்புக்கு அப்பாலான ஒழுங்குக்குள்ளோ, நெறிக்குள்ளோ கட்சி ஒருபோதும் சென்றுவிடக் கூடாது என்பது அவரது எதிர்பார்ப்பு. கட்சியின் தலைவராக இருந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்தாலும் கட்சியின் யாப்புக்கு இணங்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் உச்சபட்ச பேணுகை. அவ்வாறான ஒழுங்கோடு இருந்த கட்சி  யாப்புக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் விளைவினால் இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை வந்திருக்கின்றது. அதுவும், நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் வெகு சீக்கிரத்திலேயே நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் முதன்மைக் கட்சி செயலற்ற நிலைக்கு செல்வது என்பது மிகப்பெரிய பின்னடைவாகும்.

தமிழரசுக் கட்சி புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான சமயத்தில், இந்தப் பத்தியாளரிடம் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவரான மன்னாரைச் சேர்ந்த சிவகரன், தமிழரசுக் கட்சி நீதிமன்றங்களுக்குள் முடங்கப் போகின்றது என்று எச்சரிக்கை விடுத்தார். இதே விடயத்தை அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரிடமும் கூறியதாக அண்மையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். "...தமிழரசுக் கட்சியின் யாப்புத் தொடர்பில் அந்தக் கட்சியின் ஒரு சில தலைவர்களைத் தவிர, யாருக்கும் எந்தத் தெளிவும் இல்லை. தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்துகொண்டு செல்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒருபோதும் 166 என்ற எண்ணிக்கையைத் தாண்ட முடியாது என்று  யாப்பு வரையறுக்கின்றது. ஆனால், இன்றைக்கு 345 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற நிலையில் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள். மேலதிகமாக 179 பேர் வாக்களிப்பது என்பது மோசடிகளுக்கு வழிவகுக்கும். அதுவும், யாப்புக்கு எதிராக இந்த எண்ணிக்கை என்பது கட்சி உறுப்பினர்களின் உரிமையை மீறும் செயல். அதற்கு எதிராக நீதிமன்றங்களை நாட முடியும். அதனை தமிழரசுக் கட்சியின் சில தலைவர்கள் உணர்ந்து கொண்டாலும் அதனைப் புறந்தள்ளி நடக்கிறார்கள். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..." என்றும் சிவகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தேர்வு செய்யப்பட்டமை, அதன் பின்னராக புதிய மத்திய செயற்குழு தேர்வு செய்யப்பட்டமை மற்றும் தேசிய மாநாட்டினை நடத்துவது என்பவற்றிற்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது. இன்னொரு வழக்கு, இறுதியாக இடம்பெற்ற மத்திய குழு மற்றும் பொதுக்குழு முடிவுகளை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தேசிய மாநாட்டுக்கான தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு வழக்குகளைத் தாண்டி மேலதிகமாக இன்னும் சில வழக்குகள் எதிர்வரும் நாட்களில் தொடரப்படலாம் என்று தெரிகின்றது. இந்த வழக்குகளின் பின்னணியில் இருப்பது எல்லாமும் யாப்பினை மீறிய கட்சியின் நடவடிக்கைகள் என்பனவே. அதனை சரி செய்யாது கட்சி முன்னோக்கி பயணிப்பது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. 

தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்ற தலைவர் தேர்தலில் வென்ற சிறீதரன், எந்தத் தடை வரினும் அதனை உடைத்தெறிவோம் என்ற தோரணையில் அண்மையில் கூறியிருக்கின்றார். தடைகளைத் உடைத்து எறிவது என்பது அரசியலில் முக்கியமானது. ஆனால், தடையின் தன்மைகள், அதன் பின்னணி தொடர்பாக எந்தத் தெளிவும் இல்லாமல், வாய்ச் சவடாலாக சொற்களை வீசுவது என்பது அறிவுபூர்வமானது அல்ல. தற்போது நீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சி தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லை என்று அந்தக் கட்சிக்குள் இருக்கின்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் முதற்கொண்டு அனைத்துச் சட்டத்தரணிகளுக்கும் தெரியும். ஏனெனில், கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா தொடங்கி பலரினாலும் கட்சியின் யாப்பு தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்திருக்கின்றது. அவை சிறுதவறுகள் அல்ல. தொடர்ச்சியாக படுமோசமான தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையில், நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக வெற்றிபெறுவது சாத்தியமில்லை. மாறாக, நீதிமன்றங்களில் தலைகுனிந்து, யாப்பின் பிரகாரம் ஒழுகுகிறோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. 

இல்லையென்றால், வழக்குகளைத் தொடுத்த தரப்பினருடன் நீதிமன்றங்களுக்கு வெளியில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தித்தான் பிரச்சினைகளை முடித்துக் கொள்ள முடியும். மாறாக, சவால் விடுப்பதோ, வாய்ச் சவடால் அடிப்பதோ எந்தவித நன்மையையும் கட்சிக்கு ஏற்படுத்தாது. அது கட்சியை வருடக் கணக்கில் நீதிமன்றங்களுக்குள் முடக்கி விடும்.அது, வீட்டுச் சின்னத்தில் மீது சவாரி செய்து பதவியைப் பிடிக்கலாம் என்று நம்பியிருக்கும் பலரின் எதிர்பார்ப்பை இல்லாமல் ஆக்கிவிடும். 

புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் பெறப்பட்டுள்ள தடை உத்தரவுகளினால், தன்னுடைய தலைமைப் பதவி காப்பாற்றப்பட்டிருப்பதாக மாவை சேனாதிராஜா மனதுக்குள் மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால், அதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. ஏனெனில்,  கட்சியின் யாப்புக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகளவானோர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் பாரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத பலரையும் தலைவருக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்தமை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக முன்னிறுத்தியமை என்று பாரிய தவறுகளை அவர் இழைத்திருக்கிறார். அதற்கான பொறுப்பை அவர் நீதிமன்றத்தில் ஏற்க வேண்டி வரலாம். 

இந்த வழக்குகளைத் தொடுத்தவர்களின் நிலைப்பாடுகளை நோக்கும் போது, கட்சித் தலைவருக்கான தேர்தலில் நிறைய குளறுபடிகள் உண்டு. ஆனபோதிலும் கட்சியை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, முன்னகர முயலும் போது, ஒருசில தனிநபர்களின் பதவி வெறிக்காக கட்சியை மீண்டும் மீண்டும் மோசடியான நிலைக்கு நகர்த்தும் வேலைகள் இடம்பெறுகின்றன. அவற்றை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட மாதிரி தேசிய மாநாடு நடத்தப்பட்டிருந்தால், சிலவேளை இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்காது போயிருக்கலாம். சிறீதரன் தெரிவு, புதிய மத்திய செயற்குழு தெரிவு என்பன பொதுக்குழு அங்கீகரித்த பின்னரும் அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை சிறீதரனும் அவரது அணியினரும் மேற்கொண்ட நிலையிலேயே, நீதிமன்றத்தினூடான நீதிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, பதவிக்காக கூச்சல் போட்டு கட்சியை முட்டுச் சந்தில் நிறுத்திவிட்டவர்கள், மற்றவர்கள் மீது அவதூறுகளைப் பரப்பும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தவிர அவர்களிடம் எந்த மாற்றுத் திட்டமோ, செயலூக்கமோ இல்லை.

தலைவர் தேர்தலில் சுமந்திரன் வென்றிருந்தால், அடுத்த வாரமே தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு தமிழரசுக் கட்சிக்குள் சிலர் தயாராகவே இருந்தார்கள். அவர்கள் அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள். அவர்கள்கூட எதிர்பார்க்காத வகையில் சிறீதரன் வென்றதனால், அவர்கள் அமைதியானர்கள். இப்போது, சுமந்திரன் வென்றிருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர தயாராக இருந்த தரப்பினரும், கட்சியின் யாப்பில் ஏதாவது நெளிவு சுழிவுகள் இருக்கின்றனவா என்று யாப்பினை நன்றாக கரைத்துக் குடித்து வைத்திருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். தான் வென்றிருந்தால் அந்த வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் என்பதுவும், பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் யாப்பு ஒழுங்கு முறை பேணப்படவில்லை என்பது தொடர்பிலும் சுமந்திரன் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படியான நிலையில், கட்சியின் யாப்பு ஒழுங்காக பேணப்படவில்லை என்பதை சுமந்திரன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன்மூலம், அவரும் கட்சி யாப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது. அந்த நிலைப்பாடு, சம்பந்தனும், அவரின் பினாமி போல செயற்பட்ட மாவையும் கட்சி யாப்புக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வந்ததன் போக்கினை அங்கீகரிப்பதாகவே கொள்ள வேண்டும். கட்சிக்குள் எழும் கருத்து மோதல்களும் நிலைப்பாடு மாற்றங்களும் தமிழரசுக் கட்சியின் ஜனநாயகத் தன்மைக்கான எடுத்துக்காட்டு என்று ஊடகங்களிடம் பேசும் சுமந்திரன், கட்சியின் யாப்பு மீறப்படுகின்ற செயற்பாடுகளை கண்டும் காணாமல் விட்டமை என்பது அபத்தமானது. அத்தோடு, கட்சியின் யாப்புக்கு அமைவாக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற்றதன் பின்னர், தலைவருக்குரிய தேர்தலை நடத்துவதற்காக ஒத்துழைத்திருக்க வேண்டும். மாறாக, அவரும் ஏனோதானோ என்னு கடந்திருக்கிறார் என்பதுதான் அவரையும் இன்றைக்கு முட்டுச் சந்தில் இழுத்து விட்டிருக்கின்றது. 

ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப் போனதும், தமிழ் மக்களின் தலைவராக சம்பந்தன் உருவெடுத்தார். அவரை ஒரு சில கட்சிகளைத் தவிர, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மூத்த தலைவராக ஏற்று அவரின் கீழ் ஒன்றிணைந்தார்கள். ஆனால், அவரோ, கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் போன்று, தன்னுடைய நிலைப்பாடுகளை எடுத்தார். அதாவது, தான் எடுக்கும் முடிவுக்கு எதிராக யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அப்படியான நிலைப்பாடுகளை எடுத்தால், அவர்களை தேர்தல்களில் தோற்கடித்து வெளியே தள்ள வேண்டும். அதற்காக, பலரையும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சம்பந்தன் கொண்டு வந்தார். ஆனால், ஒரு கட்டம் வரையில் அவரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியோ, கூட்டமைப்பினரோ இன்றைக்கு புறந்தள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அது, சம்பந்தனின் பதவி மோகம் மற்றும் தனிப்பட்ட குரோத மனநிலையின் விளைவால் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமந்திரன் வரக்கூடாது என்பது தொடர்பிலான எண்ணத்தினை சம்பந்தன், 2020களிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுபோல, திருகோணமலை தமிழரசுக்குள் சண்முகம் குகதாசன் செலுத்தும் ஆளுமையை அவர் இரசிக்கவில்லை. அப்படியான நிலையில், குகதாசன் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டதை அவரினால் ஏற்க முடியவில்லை. அதனால், கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைத்தார். குறிப்பாக, தலைவர் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தன்னுடைய அணியினர் ஆறு பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சம்பந்தன் கோரியிருந்தார். அதற்கு, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் இணங்கியது. இந்த ஆறு பேர் நியமனம் என்பது கட்சியின் யாப்புக்கு எதிரானது. 

நாட்டில் எவ்வளவு பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும், தமிழ் மக்களை பிரித்தாளுவதிலும் அதிகாரங்களைப் பறிப்பதிலும் தென் இலங்கை ஒருபோதும் பின்நிற்பதில்லை. இப்போது, அரசியலமைப்பில் 22வது திருத்தம் என்ற பெயரில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெறும் பிரேரணையை உதய கம்மன்பில கொண்டுவந்திருக்கிறார். அவர், தேர்தல் வெற்றியை நோக்கி இந்தத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அந்தத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், அந்தத் திருத்தத்திற்கு எதிராக தென் இலங்கை இனவாதக் கட்சிகள் வாக்களிக்கும் வாய்ப்புக்கள் குறைவு. அப்படி வாக்களித்தால், அது அவர்களின் தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும். இவ்வாறு சமய சந்தர்ப்பங்களைப் பாவித்து தென் இலங்கை இனவாத சக்திகள், தமிழர்களுக்கு எதிரான காய்களை நகரத்தும் போது பதவி வெறி, தனிப்பட்ட குரோதம் உள்ளிட்ட தீய எண்ணங்களினால் தமிழரசுக் கட்சி தன்னை கரைத்துக் கொண்டிருக்கின்றது. அது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே பார்க்கப்படும். வாய்ச் சவடால், குழுமனநிலை, ஏதேச்சதிகார சிந்தனைகளை கைவிட்டு, ஆக்கபூர்வமான பக்கத்திற்கு தமிழரசுக் கட்சியினர் நகரவேண்டிய இறுதிக் கட்டம் இது. 

தமிழரசுக் கட்சி தற்போது விரைவாக செய்ய வேண்டியது, கட்சிக்கு எதிராக வழக்குகளை தொடுத்தவர்களுடன் நீதிமன்றத்துக்கு வெளியில் இணக்கப்பாடுகளை எட்டி, வழக்குகளை மீளப்பெற வைப்பது. அடுத்து, கட்சியின் யாப்பின் பிரகாரம் தெரிவுகளை மேற்கொண்டு ஒழுகுவது. இல்லையென்றால், தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் கைவிடும் சூழல் ஏற்படும். அப்போது, அந்தக் காட்சியைப் பார்த்து தென் இலங்கையின் இனவாதத் தரப்புக்கள் எக்காளமிட்டுச் சிரிக்கும். 

 

 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியாவுக்கான பயணம் தென் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அனுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இந்த வார ஆரம்பத்தில் புதுடில்லி சென்றனர். அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்கள். இந்தியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் கேரளா சென்று அம்மாநில தொழிற்துறை அமைச்சர் ராஜியையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். 

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றையும், கல்வியாளர்களையும் புதிதாக இணைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக உருமாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டது. ஜே.வி.பி.யில் கடந்த கால ஆயுத வன்முறை அடையாளத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நோக்கிலேயே, அனுரகுமாரவும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் புலமையாளர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்துக்குள் புகுந்து கொண்டார்கள். புதிய நாமமும், அடையாளமும் எதிர்பார்த்ததைவிட தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் அபிமானத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றது என்று தென் இலங்கை களநிலவரங்களைப் பிரதிபலிக்கும் இரகசிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதுவும், ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பும் (அரகலய) போராட்டம் முழு நாட்டையும் உலுக்கிய போது, அந்தப் போராட்டத்தில் கணிசமான பங்கினை தேசிய மக்கள் சக்தியும் வகித்தது. அதுவும், தென் இலங்கையில் கிராமங்களில் மத்திரமல்ல நகரங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பின் பின்னாலான போராட்டங்களில் மக்கள் கணிசமாக திரண்டார்கள். அந்தத் திரட்சியை குலையாமல் அனுரகுமார இன்றும் பேணுகிறார் என்பது கருத்துக்கணிப்புக்களில் வெளிவரும் தகவல். இதனால், எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய தக்கத்தைச் செலுத்தும் என்பது எதிர்பார்ப்பு. 

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சி அதிகாரத்துக்கான அரசியல் என்பது,  'ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு எதிர் எதிர்ப்பு' என்றவாறாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை அதுதான் நிலமை. ஆனால், அதன் பின்னரான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முறுகல்களை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த  சஜித் அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்தனர். பிரதான எதிர்க்கட்சியாகவும் மாறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த முறுகல்களை அடுத்து ராஜபக்ஷக்கள் தோற்றுவித்த பொதுஜன பெரமுனவும், ஐ.தே.க.வில் இருந்து சஜித் அணியினரால் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், கிட்டத்தட்ட புதிய நாமங்களைச் சூடிக்கொண்ட ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியும் என்று கொள்ளலாம். அதன் போக்கில்தான், ஜே.வி.பி.யும் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலரின் விலகலோடு தேசிய மக்கள் சக்தியாக மாறியது. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பது இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இம்முறை மும்முனைப் போட்டிக்கான களம் விரிந்திருக்கின்றது. 

காலியான கூடாரமாக இருக்கும் ஐ.தே.கவும், ராஜபக்ஷக்களும் ஓரணியில் நின்று ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் முன்னிறுத்தப்படுகிறார். அதேவேளை தேசிய மக்கள் சக்தி வழக்கத்தைவிட அதிக வலுவோடு இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்கின்றது. அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார முன்னிறுத்தப்படுகிறார். இருமுனைப் போட்டியில் இருந்து பிரதான தேர்தலொன்று மும்முனைப் போட்டியாக மாறுவது என்பது பல நேரங்களில் ஆச்சரியங்களை நிகழ்த்தக்கூடியது.குறிப்பாக, 'ரணில் எதிர் சஜித்' என்ற நிலை மாறி, 'ரணில் எதிர் சஜித் எதிர் அனுர' எனும் நிலையில் வாக்குப் பிரிவு, மிதக்கும் வாக்குகளின் இறுதிக் கட்டத் திரட்சி ஆகியன சிலவேளை அனுரகுமாரவை முதன்மை இடத்துக்கு நகர்த்திவிடும் வாய்ப்புக்கள் இருப்பதான எதிர்பார்ப்புக்களும் தென் இலங்கையில் இருக்கவே செய்கின்றன. இந்த எதிர்பார்ப்புக்கள்தான், இந்தியாவை தேசிய மக்கள் சக்தியை நோக்கி தன்னுடைய கரங்களை நீட்ட வைத்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஆச்சரியங்கள் நிகழ்ந்து அனுரகுமார சிலவேளை ஜனாதிபதியாகிவிட்டால், அதன் பின்னர் இலங்கையின் புதிய ஆட்சியாளருடன் தொடர்புகளை ஆரம்பிப்பதைவிட, முன்னரே சந்திப்புக்களை நடத்தி வைத்துக் கொள்வது நல்லது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காகத்தான் உத்தியோகபூர்வ அழைப்பை தேசிய மக்கள் சக்தியை நோக்கி இந்தியா விடுத்திருக்கின்றது. 

வழக்கமாக இடதுசாரிய சித்தாந்தத்தைப் பேணுவதாக கூறிக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தி, சீனா ஆதரவு நிலைப்பாடோடு இருந்து வந்திருக்கின்றது. இந்தியாவை கடுமையாக எதிர்த்தும் வந்திருக்கின்றது. இலங்கையில் ஆக்கிரமிப்பு முனைப்புக்களை இந்தியா முன்னெடுப்பதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டியும் போராட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி நடத்தியிருக்கின்றது. அடிக்கடி சீனாவின் அழைப்பை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செல்வது வழக்கம். அவர்கள் இந்தியா செல்வது என்பது, இந்தியாவின் இடதுசாரி கட்சிகள் மற்றும் இயக்கங்களில் நிகழ்வுகளில் பங்குபற்றுதல் என்ற அளவிலேயே இருந்திருக்கின்றது. ஆனால், இம்முறை இந்திய வெளிவிவகார அமைச்சர், தேசிய மக்கள் சக்தியினரைச் சந்திக்கிறார். அத்தோடு, தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார் என்பது, இந்தியா தேசிய மக்கள் சக்தியை பிரதான சக்தியாக உணர்ந்ததன் விளைவாக நடந்திருப்பது. அதுவும் இந்தியாவின் வெளிவிவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்களாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கும் எஸ்.ஜெய்சங்கரும், அஜித் தோவாலும் அனுரகுமாரவை சந்தித்தது என்பது கவனிக்கத்தது. 

அனுரகுமார இந்தியா சென்றமை, ஐக்கிய மக்கள் சக்தியை கலக்கமடைய வைத்திருக்கின்றது. ஏனெனில், இந்தியா போன்ற பிராந்திய வல்லரசு தேவையற்று எந்தவொரு அமைப்புக்கும் முக்கியத்துவம் வழங்காது. அப்படிப்பட்ட சூழலில், இந்தியா அனுரகுமாரவுக்கான முக்கியத்துவத்தை, நீண்ட ஆய்வுகள், புலனாய்வு அறிக்கைகளின் பின்னணியில்தான் வழங்கியிருக்கும் என்பது உணர்நிலை. அது, தென் இலங்கை மக்களிடம் தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவை மறைமுகமாக அதிகரிப்பதற்கும் உதவலாம். இதனால், அனுரகுமாரவை 'ரணில் ராஜபக்ஷக்களின்' B அணியாக முன்னிறுத்தும் வேலைகளில்  ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்திருக்கின்றது. மறுபுறம், ஐக்கிய மக்கள் சக்தியை சந்திப்புக்கு அழைக்க வேண்டும் என்று சஜித் இந்தியாவிடம் கோரியிருக்கிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகின்றது. 

வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பிக்கு தேசிய மக்கள் சக்தி என்ற அடையாள மாற்றம் தென் இலங்கை அரசியலிலும் பிராந்தியத்திலும் முக்கியத்துவும் வழங்கியிருக்கின்றது என்பது, அதன் மேலான இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆயுத வன்முறை அடையாளத்தைத் தாண்டுவதற்காக புதிய நாமத்துக்குள் சென்ற தேசிய மக்கள் சக்திக்கு, இடதுசாரி அடையாள இழப்பும் சேர்ந்தே நடைபெற ஆரம்பித்திருக்கின்றது. அது, நவதாராளவாதிகள் என்ற நிலையை நோக்கிய நகர்வை வேகப்படுத்தியிருக்கின்றது. இது, தென் இலங்கையின் மத்தியதர வர்க்கத்தினரை தேசிய மக்கள் சக்தியை நோக்கி திரளச் செய்யலாம். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் சேரும் மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறுவதில்லை என்ற நிலை இருக்கின்றது. அதற்கு அந்தக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது மாத்திரம் காரணமல்ல மாறாக, அந்தக் கட்சியை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அந்தக் கட்சியின் பின்னணி என்பன எல்லாம் காரணமாக இருந்திருக்கின்றது. 

தமிழ்ச் சூழலில் எப்படி சாதியவாதம் அதிகாரம் செலுத்துகின்றதோ, அதே அளவுக்கு தென் இலங்கையிலும் கொவிகம - பௌத்த மேலாதிக்கம் என்பது, அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. அது, கொவிகம - பௌத்த அடையாளங்களுக்கு அப்பால் அதிகாரங்களையோ ஆட்சியையோ பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அதனால்தான் தென் இலங்கை அரசியலில் கொவிகம - பௌத்த மேலாதிக்கத்தை பிரதிபலிக்கும் ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் ஆட்சியின் சக்திகளாக விளங்கியிருக்கின்றன. இந்த இரு கட்சிகளில் ஒன்று தவறினால் மற்றையதைத் தெரிவு செய்யுமாறுதான் தென் இலங்கையின் சிறுசிறு கிராமங்களில் இருக்கும் விகாரைகள் முதல், பௌத்த பீடங்கள் வரையில் பேணப்படும் அணுகுமுறை. தமிழ்ச் சமூகத்தின் ஆலயங்கள் செலுத்தும் தாக்கத்தினைவிட தென் இலங்கையில் விகாரைகள் செலுத்தும் ஆளுமை அதிகமானது. கிராமங்கள், பிரதேசங்களின் முடிவுகள் கூட விகாரைகளுக்குள் கூடி எடுக்கப்படுகின்றன. இதனால், இலங்கையின் பௌத்த மேலாதிக்க வரலாறு என்பது கொவிகம சாதியினரால் நிகழ்ந்தது. அதனால், வறிய பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஆரம்பத்தில் எழுந்த ஜே.வி.பி. தென் இலங்கையின் ஆதிக்க சக்திகளினால் தீண்டத்தகாத தரப்பாக பார்க்கப்பட்டது. ஜே.வி.பி.யின் கிளர்ச்சிகள் தென் இலங்கையின் ஆட்சியாளர்களினால் படுமோசமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டே அடக்கப்பட்டது. அதன்போது, வர்க்க பேதமும் சாதிய மேலாதிக்கவாதமும் தென் இலங்கையில் தலைவிரித்தாடியது. அப்படியான சூழலில் ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக மாறிய நிலையிலும், கொவிகம - பெளத்த மேலாதிக்கத்தைத் தாண்டி தென் இலங்கை மக்கள் அனுரகுமாரவை ஜனாதிபதியாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவுக்கு இல்லை என்றே இந்தப் பத்தியாளர் நம்புகிறார். ஆனால், பொதுத் தேர்தலில் சுமார் 30க்கு அண்மித்த ஆசனங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதற்கான வாய்ப்புக்களை மறுப்பதற்கில்லை. 

இந்தியாவின் அழைப்பை தேசிய மக்கள் சக்தி பெரு மகிழ்வாக உள்ளூர கொண்டாடுகின்றது. அதனை வெளிக்காட்டவும் செய்கின்றது. ஆனால், தன்னுடைய இடதுசாரி அடையாளத்தையும் கைவிடவில்லை என்று காட்டுவதற்காக டில்லிப் பயணத்தை முடித்து திரும்பும் வழியில் கேரளா சென்று அனுரகுமார குழுவினர் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் தற்போது இடதுசாரிகள் ஆட்சி செலுத்தும் ஒரே மாநிலம் கேரளாதான். இடதுசாரிகள் கேரளாவைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஒற்றை இலக்க ஆசனங்களைக் கைப்பற்றுவதே இன்றைக்கு பெரிய காரியமாகிவிட்டது. அப்படியான சூழலில் இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி செலுத்தும் மாநிலத்துக்கும் சென்று வந்திருக்கிறோம் என்று காட்ட அனுரகுமார முயன்றிருக்கிறார். ஆனால், அம்மாநில முதலமைச்சர் பிரணாஜி விஜயனை அவர்களினால் சந்திக்க முடியவில்லை. 

இந்தியாவின் அழைப்பும், டில்லியில் வழங்கப்பட்ட முக்கியத்துவமும் தேசிய மக்கள் சக்தியை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அந்த மனநிலையோடு தேர்தல்களை நோக்கிய நம்பிக்கை பயணத்தை தேசிய மக்கள் சக்தி தென் இலங்கையில் ஆரம்பிக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி காண்பதற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமானவை. அதுவும் மும்முனைப் போட்டிக் களத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிக தாக்கத்தைச் செலுத்தும் வல்லமை கொண்டவை. அப்படிப்பட்ட சூழலில், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி என்ன திட்டங்களை முன்னெடுக்கப்போகின்றது என்ற கேள்வி முக்கியமானது. அதுவும், வடக்கு கிழக்கு இணைப்பைப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரித்தது ஜே.வி.வி. என்ற வெறுப்பு தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அத்தோடு, தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை ஜே.வி.பியோ, இன்றைய தேசிய மக்கள் சக்தியோ ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. ஒற்றை இலங்கைக்குள் ஒரே அதிகார மையமாக திரள்வதையே, பௌத்த மேலாதிக்க சக்திகள் போன்று தேசிய மக்கள் சக்தியும் வலியுறுத்தி வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியினால், தமிழ் மக்கள் ஒருபோதும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. அதுபோல, ராஜபக்ஷக்களுக்கு எதிரான கட்டத்திலேயே முஸ்லிம் மக்களும் தங்களின் வாக்களிப்பை உறுதி செய்யும் சூழல் தற்போதுள்ளது. அப்படியான சூழலில் தேசிய மக்கள் சக்தியும் தென் இலங்கைக்குள் மாத்திரம் வாக்கு அறுவடை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது சாத்தியமான ஒன்றல்ல. 

Ula

Top Stories

சுவிற்சர்லாந்தின் நியோனில்,  58 வது, Visions Du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில், ஆவணத்திரைப்படங்களுக்கு மட்டுமென இருக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இத்திரைப்படவிழா.

ஒரு தாய் தோட்டத்தில் தன் குழந்தைக்கு அழகான மலர்களைக் காட்டி ரசித்துக் கொண்டிருப்பாள்,  அந்த அழகிய மலரின் செந்நிறம் திரையில் விரியும் போது எழும் பின்னணி இசையும் உயரும்.

அகடமி விருதுகள் எனும்ஆஸ்கார் விருதுகள் விழாவின் 96வது பதிப்பு,  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நேற்று மார்ச் 10ந் திகதி நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹைமர்", சிறந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட ஏழு விருதுகளை வென்றது. 

பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில்  போட்டியிட்ட It's Okay!  கொரியன் திரைப்படம், ஜெனரேஷன் கேபிளஸ் பிரிவின் முதன்மை விருதான கிரிஸ்டல் கரடி விருதினை வென்றிருக்கிறது.

Top Stories

Grid List

உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப், செய்தியிடலை மேம்படுத்த புதிய உரை வடிவமைத்தல் விருப்பங்களைச் சேர்த்துள்ளது.

ஏப்பிரல் மாத மேஷ இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

நீல நிலவாக குடும்ப பெண் போல் கையில் ஒரு புத்தகத்தை கட்டி அணைத்தபடி வந்திருந்தார் அவர்.

விஜய் நடிக்கும்  GOAT திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டு தினமான இன்று சற்று முன் வெளியாகியுள்ளது.

4tamilMedia